அகாலத்தில்
மறைந்த இதழியல் நேசர்
2000ஆம் ஆண்டில் இதழியல் துறையில் கால்பதித்து சென்னையில்
வேலையைத் தொடங்கினேன். 2004இல்
திருச்சி ‘தினமணி’ பதிப்பில் செய்தியாளராகச் சேர்ந்தேன். அதற்குச் சில மாதங்களுக்கு
முன்பாகவே அந்தப் பதிப்பு தொடங்கப்பட்டிருந்தது. சிறிது காலத்திலேயே அங்கிருந்த
மூத்த உதவி ஆசிரியர்கள் அவரவர் ஊருக்கு இடமாற்றலாகிச் சென்றுவிட்டார்கள். அந்தக்
காலத்தில் நான் உதவி ஆசிரியராகி இருந்தேன்.
அப்போது ‘தினபூமி’ நாளிதழிலிருந்து சிலர் ‘தினமணி’யில்
சேர்ந்தார்கள். அப்படி வந்தவர்களில் ‘தினபூமி’ திருச்சி பதிப்பின் செய்தி
ஆசிரியராக இருந்த தன்ராஜ் சாரும் ஒருவர். அன்றைய நிலையில் திருச்சி ‘தினமணி’
பதிப்பில் பணியாற்றிய உதவி ஆசிரியர்களில் மூத்தவராக இருந்தார். 2005இல் ‘தினகரன்’
நாளிதழை சன் டிவி நிறுவனம் வாங்கியிருந்த நேரத்தில் திருச்சி ‘தினமணி’யிலிருந்து 5
பேர் விலகி திருச்சி ‘தினகரன்’ பதிப்பில் சேர்ந்தோம். ‘தினகர’னிலும் என்னுடைய சக
உதவி ஆசிரியராகச் சேர்ந்தார் தன்ராஜ் சார்.
‘தினபூமி’யிலிருந்து…
அவருடைய குடும்பத்திலும் அவருடைய ஊரிலும் அநேகமாக முதல்
தலைமுறை பட்டதாரியாக அவர் இருக்க வேண்டும். ‘தினபூமி’யிலிருந்து ஒருவர் ‘தினமணி’
போன்ற பாரம்பரிய நிறுவனம் ஒன்றில் சேர்ந்து வேலை பார்ப்பதும், அதற்குரிய வேலைத்தரத்தை
மேம்படுத்திக்கொள்வதும் எளிதான காரியமல்ல. இதழியல் பணி என்பது தொடர்ச்சியாகக்
கற்றுக்கொள்ள வேண்டிய தேவையைக் கொண்டது. இந்தப் பண்புகள் அவரிடம் இருந்தன.
இதழியல் பணியில் உள்ளூர் செய்திகளைத் தொகுத்துப்
பக்கமாக்கித் தருவது என்பது இருப்பதிலேயே கடினமான வேலை. வாசகர்களுக்கும்
வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கும் அந்தப் பணியில் உள்ள சிக்கல்கள் தெரியாது.
அதிலும் திருச்சி மாவட்டப் பதிப்பு என்பது தமிழ்நாட்டிலேயே சிக்கல் மிகுந்தது.
காரணம், மற்ற எல்லா பதிப்புகளும் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.
திருச்சி பதிப்பில் வேலை பார்ப்பவர்கள் மட்டும் 7 மாவட்டங்களைக் (திருச்சி, கரூர்,
பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம்) கையாண்டாக வேண்டும்.
‘தினமணி’, ‘தினகரன்’ இரண்டிலுமே இதுதான் நிலைமை.
அது மட்டுமல்லாமல் இந்த மாவட்டங்கள் காவிரிப் பாசன
மாவட்டங்கள். வேளாண்மை முக்கியத் தொழில். வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மழை,
வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களை அதிகம் சந்திக்கக்கூடிய மாவட்டங்களும்கூட.
இப்படி பல்வேறு சவால்களை ஆண்டின் பல்வேறு காலகட்டங்களில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்தச் சவால்களைச் சந்தித்தே மாவட்டப் பக்கங்களையும்
செய்திகளையும் வழங்கிவந்தோம். திருச்சி ‘தினமணி’யில் ஒன்றரை ஆண்டு, திருச்சி ‘தினகர’னில்
ஒன்றரை ஆண்டு பணிபுரிந்த பின் 2007இல் நான் சென்னைக்கு வந்துவிட்டேன். தன்ராஜ் சார்
‘தினகர’னிலேயே தொடர்ந்தார்.
இடையில் ஒரு சில முறை திருச்சி சென்றிருந்தபோது அவரையும்
இதழாளர் வின்சென்டையும் சந்தித்துப் பேசியிருக்கிறேன். என் புத்தகங்களைக்
கொடுத்திருக்கிறேன். தன்ராஜ் சார் வாசிப்பின் மீது ஆர்வம் கொண்டவர். குறிப்பாக,
இதழியல் சார்ந்த வாசிப்பின் மீதும் இதழியல் எழுத்தின் மீதும்.
இதழியல் நேசிப்பு
2013இல் ‘இந்து தமிழ்’ தொடங்கப்பட்டபோது, நான் சென்னை
பதிப்பில் சேர்ந்தேன். அவர் திருச்சி பதிப்பில் செய்தி ஆசிரியராக இணைந்தார்.
மீண்டும் எங்கள் தொடர்பு அலுவல்ரீதியாகத் தொடர்ந்தது. செய்திப் பிரிவில்
இருந்தாலும் இதழியல் எழுத்து சார்ந்தே அவருடைய ஆர்வம் அதிகமாக இருந்தது. அனைத்து
வார இதழ்கள், இணைப்பிதழ்களை வாசிக்கக்கூடியவராகவும் பின்தொடரக்கூடியவராகவும்
இருந்தார். ‘இந்து தமிழ்’ இணைப்பிதழ்கள், மலர்களை வாசித்துவிட்டு அடிக்கடி அழைப்பார்,
மனமாரப் பாராட்டுவார்.
கிராமத்து மனிதர்களுக்கே உரிய சொற் பிரயோகங்களுடன் சாமி,
சாமி என்ற பின்னொட்டை சேர்த்தே அனைவரையும் அழைப்பார். ‘அது இல்ல சாமி’, ‘அது
கிடக்கட்டும் சாமி’ என்பார். ஒரு கிராமத்திலிருந்து முதல் தலைமுறை பட்டதாரியாகி,
இதழியல் போன்றதொரு புதிய துறையில் கால் பதித்து, பல தப்படிகள் கடந்து, பல்வேறு
நிறுவனங்களில் வேலை பார்த்து, ஒரு பதிப்புக்குப் பொறுப்பாக வருவது என்பது எல்லோருக்கும்
சாத்தியப்படுவதில்லை. ‘தினகர’னிலும் ‘இந்து தமி’ழிலும் வயதில் இளைய செய்தி
ஆசிரியராக இருந்தவர் தன்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
பணி சார்ந்து நடைமுறைச் சிக்கல்கள் எத்தனையோ
இருந்தபோதிலும், இதழியல் பணியை நேசிக்கக்கூடிய ஒருவராக, அது சார்ந்த புகாரோ,
புலம்பல்களோ இல்லாதவராக இருந்தார். உடன் பணிபுரிந்த எல்லோராலும் அவர் சரியாகப்
புரிந்துகொள்ளப்பட்டிருக்கவில்லை. அவருடைய இயல்பு, தன்மை புரியாமல் பலரும் அவரை
தவறாகப் புரிந்துகொண்டது பல முறை நடந்திருக்கிறது.
இப்படியா நடக்கும்?
இணைப்பிதழ் பக்கம் ஒன்றில் நேர்ந்துவிட்ட தவறை,
அச்சாவதற்கு முன்னதாக கணினி வழியாகப் படித்துவிட்டு டிசம்பர் 2ஆம் தேதி மாலையில்
சுட்டிக்காட்டினார். உடனடியாக அதைத் திருத்தினோம். அடுத்த நாள் இரவு
தூங்குவதற்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது, அதிர்ச்சியூட்டும் அந்தச் செய்தி
வந்தது. தன்ராஜ் சார் இறந்துவிட்டார் என்று. என்னால், அதை ஏற்றுக்கொள்ளவோ,
புரிந்துகொள்ளவோ முடியவில்லை. 24 மணி நேரத்துக்கும் முன்னதாக இயல்பாக இயங்கிக்கொண்டிருந்த
ஒருவர் சட்டென்று மடிந்துபோவதற்கு அப்படியென்ன காரணம் இருக்க முடியும் என்று மனது அரற்றியது.
நீரிழிவு நோய் காரணமாக இதயத்தில் ஏற்பட்ட திடீர் பிரச்சினையால் அவர் இறந்திருக்க
வேண்டும். இத்தனைக்கும் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த
நிலையிலும் அவர் இறந்தது மிக மிக துரதிருஷ்டசவசமானது.
2020ஆம் ஆண்டில் கோவிட்-19 பலரைப் பறித்துக்கொண்டுவிட்டது.
மற்றொருபுறம் இயல்பான வாழ்க்கை குலைந்து, வாழ்க்கை முறை மாற்றங்கள்-நெருக்கடிகளால்
பலரை இழந்துவிட்டோம். அவர்களில் தன்ராஜ் சார் போன்ற நெருக்கமானவர்களும்
சேர்ந்துவிட்டது எளிதில் ஜீரணித்துக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது.
-
ஆதி வள்ளியப்பன்
தொடர்புக்கு: amithatamil@gmail.com
